Sunday, February 12, 2017

போதைப் பொருளாகுதா இருமல் மருந்து?

Image result for cough

இருமலில் இருந்து நிவாரணம் தருவதற்குத்தான் இருமல் மருந்து. ‘‘சிலர் இருமல் மருந்துகளை போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது உடல்நலம், மனநலம் இரண்டிலும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும்’’

இருமல் மருந்தை போதை வஸ்துவாக பயன்படுத்துவது உண்மையில் அதிர்ச்சியூட்டும் செய்தி! இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? இதைத் தடுக்க என்ன வழி? இருமல் மருந்துகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? 

‘‘இருமல் ஒரு நோயல்ல, அது நோயின் அறிகுறி. மூன்று காரணங்களால் இருமல் வரலாம். உணவினாலோ, தூசிகளினால் ஏற்படும் அலர்ஜியினாலோ மூக்கிலிருந்து இருமல் உருவாகும். இரண்டாவது வகை இருமல், சைனஸ் அறைகளின் சளியால் ஏற்படும். மூன்றாவது வகை, மூச்சுக்குழல் சுருங்குவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இருமல் உண்டாகும். இதைத்தான் ஆஸ்துமா என்கிறோம். இந்த மூன்று வகைகளைத் தவிர்த்து அரிதாக அசிடிட்டியால் இருமல் வரலாம். சில நேரங்களில் மன நோய்களினால் கூட இருமல் வரும். இதை Psychogenic cough என்று சொல்வோம். இருமல், தும்மல் தொடர்ந்து இருக்கும்.

எந்தப் பரிசோதனை செய்து பார்த்தாலும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பார்கள். இருமல் ஏன் ஏற்படுகிறது என்பதை சாதாரணமாகக் கண்டுபிடிக்க முடியாது. இது மன நலன் சார்ந்து வருவது. அதனால், இருமல் என்பது ஒரு நோயின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, இருமல் நின்றால் போதும் என்று தன்னிச்சையாக மருந்து சாப்பிடக் கூடாது’’ என்ற ஸ்ரீதரனிடம் இருமல் குறித்து மேலும் பேசினோம்...

எப்போது டாக்டரைப் பார்க்க வேண்டும்?

‘‘ஒரு வாரத்துக்குத் தொடர்ந்து இருமல் இருந்தாலோ, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்று இருந்தாலோ டாக்டரை பார்க்க வேண்டும். இருமலில் ரத்தம் வருவது, வயதானவர்களுக்கு தொடர் இருமலுடன் மூச்சுத்திணறல் இருப்பது, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி இருப்பது ஆபத்தானது.

 எனவே, இவர்கள் உடனடியாக டாக்டரைப் பார்க்க வேண்டியது அவசியம். முதலில் பொது மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வதே போதுமானது. அப்படியும் இருமல் நிற்கவில்லை என்றால், ஸ்பெஷலிஸ்ட்டுகளை பார்க்கலாம்.’’
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் இருமல் மருந்து சாப்பிடக் கூடாதா?

‘‘எந்தப் பிரச்னைகளுக்கும் சுய மருத்துவம் பார்ப்பது தவறு. வறட்டு இருமலாக இருந்தால் அந்த இருமலை நிறுத்தக் கூடிய Suppressant  வகை மருந்தை சாப்பிட வேண்டும், சளி இருமலாக இருந்தால் இருமலை அதிகப்படுத்துகிற Dextromethorphan(DM) மருந்தை சாப்பிட வேண்டும் (அப்போது தான் சளி வெளியேறும்). 

மூன்றா வது வகையில் சளியை இளக்கி சிரமம் இல்லாமல் இருமலை நிறுத்தும் Expectorant மருந்துகள் உள்ளன. உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இருமல் என்ன வகை இருமல் என்பதை ஒரு டாக்டரால்தான் கண்டுபிடிக்க முடியும். நுரையீரலில் ஏற்பட்டிருக்கும் நிமோனியா தொற்று, காசநோய், புற்றுநோய் போன்ற நோய்களின் அறிகுறியாகக் கூட இருமல் வெளிப்படும்.’’  இருமல் மருந்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

‘‘மருந்துகள் ஏற்படுத்துகிற நல்ல விளைவை விட, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் சமயங்களில் அதிகம். அதனால், டாக்டர் எந்த அளவுக்கு சாப்பிடச் சொல்கி றாரோ அந்த அளவுக்குத்தான் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இடையில் இருமல் அதிகமாக இருக்கிறது என்பதற்காக நாமாகவே சாப்பிடக் கூடாது. 

தூக்கம் ஏற்படுத்துகிற இருமல் மருந்துகளை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடவே கூடாது. சிலர் இந்த வகை இருமல் மருந்துகளை போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள். இது உடல்நலத்தை மட்டுமல்ல, மனநலனையும் கடுமையாக பாதிக்கும்’’ என்கிறார் டாக்டர் ஸ்ரீதரன். 

இருமல் மருந்துகளை போதை மருந்துகளாகப் பயன்படுத்துவதால் மனரீதியாக என்னென்ன பாதிப்புகள் வரும்? மனநல மருத்துவர் ஆர்.சத்திய நாதனிடம் கேட்டோம். ‘‘மூளையில் 
Cough centre என்ற இடத்திலிருந்துதான் இருமல் ஏற்படுகிறது. இருமல் மருந்து இந்த காஃப் சென்டரை அமிழ்த்தி இருமலைத் தடுக்கிறது.

 மூளைக்குள் நிகழும் ரசாயன மாற்றம் இது என்பதால், இருமல்   மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு ஒருவித   மயக்கநிலை வரும். குழந்தைகளாக இருந்தால் மருந்து சாப்பிட்டதும் தூங்கிவிடுவார்கள். ஆனால், கொஞ்சம் வளர்ந்த பருவத்துக்கு மேல் இருப்பவர்களுக்கு மெலிதான மயக்கம் வரும். இது, ஆல்கஹால் பயன்படுத்தியதுபோல் தூக்கமும் இல்லாமல், விழிப்பும் இல்லாமல் போதையான நிலையை ஏற்படுத்தும். இருமல் மருந்தில் வலியைத் தாங்கிக் கொள்வதற்காக சேர்க்கப்படும் ‘கொடின்’ என்ற வேதிப் பொருளே இந்த மனநிலையைக் கொடுக்கிறது. 

வலியைத் தாங்கி, தூக்கத்தைத்   தருவதற்காக சேர்க்கப்படும் இந்த வகை மருந்துகளை போதையை விரும்புகிறவர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மது வாங்குவது, அருந்துவது என்றால் அதற்கென இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும். ஆனால், இருமல் மருந்து சாதாரணமாக எல்லா மெடிக்கல் ஷாப்களிலும் கிடைக்கிறது. இந்த போதை ஆரம்பத்தில் சந்தோஷமானதாகத் தெரியலாம். ஆனால், நாளடைவில் விபரீதமான பின்விளைவுகளை உண்டாக்கும்.

 நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் மனநோயாளியாகும் வாய்ப்பு அதிகம். எந்நேரமும் அதே ஞாபகமாக இருப்பது, கிடைக்காவிட்டால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது, இனம்புரியாத பய உணர்வு, பதற்றம், எரிச்சல், மற்றவர்களுடன் சுமுகமாகப் பழக முடியாதது என இயல்பான வாழ்க்கை முழுவதும் குளறுபடியாகும். 

இதனால் படிப்பு, வேலை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என எல்லாப் பக்கமும் பிரச்னைகளுக்குள்ளாகி வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்கு ஆளாக நேரிடும்’’ என்று எச்சரித்த டாக்டர் சத்தியநாதன், போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்பது எப்படி என்பதையும் இதைத் தடுப்பது எப்படி என்பதையும் விளக்குகிறார். 

‘‘எந்த போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களையும் அந்தப் பழக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவது சாத்தியம்தான். அந்த வகையில், இருமல் மருந்து போதைக்கு ஆளானவர்களுக்குத் தகுந்த கவுன்சலிங் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. போதைக்கு ஆளானவர் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மூன்று வாரங்களில் போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துவிடலாம். ‘கொடின்’ கலக்காமல் இருமல் மருந்து தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

அதேநேரத்தில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தூக்க மாத்திரைகள் வாங்க முடியாது என்ற விதிமுறைகள் இருமல் மருந்துகளுக்கும் அமல்படுத்தப்பட்டால் இந்த அபாயத்தைத் தடுக்க முடியும்!’’ என்கிறார் உறுதியாக!இருமல் என்பது ஒரு நோயின்வெளிப்பாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, இருமல் நின்றால் போதும் என்று தன்னிச்சையாக மருந்து சாப்பிடக் கூடாது.

No comments:

Post a Comment