புற்றுநோய் செல்
நம் உடலில் தினமும் கோடிக்கணக்கான பழைய செல்கள் மறைந்து, அவற்றுக்குப்
பதிலாக புதிய செல்கள் உருவாகிக்கொண்டே இருக்கின் றன. இதில், சில செல்கள்
மட்டும் இயல்புக்குமீறி உருவாகும். இவற்றை நம்முடைய நோய் எதிர்ப்புச்
சக்தியே அழித்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இயல்புக்கு
மீறிய இந்த செல்கள் மிக வேகமாக வளர்ச்சியடைகின்றன. இதையே புற்றுநோய்
என்கிறோம். இந்த செல்கள், ஆரோக்கியமான செல்களுக்கு இடையே ஊடுருவி, அவற்றை
அழிக்கும் ஆற்றல் கொண்டவை. உடலில் புற்றுநோய் உருவாக்கும், உடல் உறுப்பு
செல்கள் அறுபதை இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச் சியாளர்கள்
வகைப்படுத்தியுள்ளனர். இதுவரை, 200-க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகள்
கண்டறியப்பட்டுள்ளன.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் என்பது மிகவும் மென்மையான, ஸ்பாஞ்ச் போன்ற தன்மை கொண்ட உறுப்பு.
சுவாசித்தலின்போது கார்பன் டை ஆக்ஸைடை பிரித்து வெளியேற்றுவதும், ஆக்சிஜனை
ரத்தத்தில் கலப்பதும் இதன் வேலை. தவிர்க்கக் கூடிய புற்றுநோய்களில்
முதலிடம் இதற்குத்தான். சிகரெட் பழக்கம், இந்தப் புற்றுநோய் ஏற்பட
முக்கியக் காரணம். உலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் 16 லட்சம் பேர் நுரையீரல்
புற்றுநோய் காரணமாக உயிரிழக்கின்றனர்.
நாட்பட்ட இருமல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சுவாசித்தலில்
சிரமம், நெஞ்சுவலி, வீஸிங், உடல் எடை இழப்பு, எலும்பு வலி போன்றவை
நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள். சிகரெட் புகைப்பவர்களுக்கு
மட்டுமல்ல, சிகரெட் புகையை சுவாசித்தவர் களுக்கும்கூட நுரையீரல்
புற்றுநோய் ஏற்படலாம்.
சளியைப் பரிசோதனை செய்வதன் மூலமாகவும், நுரையீரல் பயாப்சி செய்வதன் மூலமும்
புற்றுநோய், நுரையீரலில் மட்டும் உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.
எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், பெட் ஸ்கேன் போன்ற பரிசோதனை களின்மூலம் நுரையீரல்
புற்றுநோய் வேறு உறுப்பு களுக்குப் பரவியுள்ளதா எனக் கண்டறியலாம்.
புற்றுநோயின் நிலையைப் பொறுத்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்குவது,
நுரையீரலின் மிகப்பெரிய பகுதியை நீக்குவது, நுரையீரல் அறைகளையே நீக்குவது,
முழு நுரையீரலை நீக்குவது என்று சிகிச்சை திட்டமிடப்படும். புற்றுநோய்
நிலையின் அடிப்படையில், கீமோதெரப்பி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகளும்
அளிக்கப்படும். நம் ஊரில் 80-85 சதவிகித புற்றுநோய் அறுவைசிகிச்சைகள்
முழுமையான பலனளிப்பதில்லை. ஏனென்றால், புற்றுநோய் முற்றி, மூன்று
அல்லது நான்காம் நிலைகளில்தான் மருத்துவ உதவிக்கு வருகிறார்கள்.
மார்பகப் புற்றுநோய்
இந்தியாவில் மட்டும் அல்ல... உலக அளவில் பெண்கள் மத்தியில் புற்றுநோய்
உயிரிழப்பு ஏற்பட முக்கியக் காரணம் மார்பகப் புற்றுநோய் தான் என்று
சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். வயது அதிகரித்தல், மரபியல் (அம்மாவுக்கு
மார்பகப் புற்றுநோய் இருந்தால், பெண்ணுக்கும் வர வாய்ப்பு உள்ளது), உடல்
பருமன், மிக இளம் வயதில் பூப்பெய்துதல், மிகத் தாமதமான மெனோபாஸ், மிகத்
தாமதமான குழந்தைப்பேறு, குழந்தைப்பேறு இன்மை, மது - புகைப் பழக்கம் போன்ற
காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம்.
மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதன் மூலம், கட்டி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா
என்பதைக் கண்டறியலாம். மேமோகிராம் என்ற எக்ஸ்ரே பரிசோதனை மூலமாக மார்பகப்
புற்றுநோயைக் கண்டறியலாம். இதில், இயல்புக்கு மீறிய செல் வளர்ச்சி
கண்டறியப்பட்டால் பயாப்சி பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் புற்று செல்லின் வளர்ச்சி, அமைப்பைக்
கண்டறியலாம். ஹார்மோன் தெரப்பி, புற்றுநோய் செல்களை அகற்றுவது, சிலநேரம்
ஒரு மார்பகத்தை அகற்றுவது, கீமோதெரப்பி, ரேடியேஷன் தெரப்பி என்று
புற்றுநோயின் தீவிரம் மற்றும் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து சிகிச்சை
திட்டமிடப்படும்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய்
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்ற கிருமி காரணமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்.
தடுப்பூசி மூலம் தவிர்க்கக்கூடிய ஒரே புற்றுநோயும் இதுதான். இந்த வைரஸ்
கிருமி, தாம்பத்ய உறவின் மூலம் பெண்ணின் கர்ப்பப்பைவாயை அடைகிறது. பெண்ணின்
நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, இந்த வைரஸ் கிருமி, புற்றுநோயை
ஏற்படுத்துகிறது. தாம்பத்யத்துக்குப் பிறகு ரத்தக் கசிவு, மாதவிலக்குக்கு
இடைப்பட்ட நாட்களிலும், மெனோபாஸுக்குப் பிறகும் பிறப்புறுப்பில் ரத்தக்
கசிவு, வெள்ளைப்படுதல், துர்நாற்றம், இடுப்பு வலி, தாம்பத்யத்தின்போது
தாங்க முடியாத வலி போன்றவை இதன் அறிகுறிகள்.
மிகவும் இளம் வயதில் தாம்பத்ய வாழ்வில் ஈடுபடுவது, நோய் எதிர்ப்புச் சக்தி
குறைதல், சிகரெட் பழக்கம்,ஒருவருக்கும் மேற்பட்டவர் களுடன்
தாம்பத்தியத்தில் ஈடுபடுவது, தகாத பாலியல் உறவு மூலம் தொற்றுக்கள்
ஏற்படுதல் ஆகியவை கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
இந்தப் புற்றுநோயை மிகவும் ஆரம்பக் காலகட்டத்திலேயே கண்டறிந்து, மிக எளிய
முறையில் சிகிச்சை பெறமுடியும். பெண்கள், திருமணத்துக்கு முன்பாகவே
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இந்தப்
புற்றுநோய் வர வாய்ப்புள்ள பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை எளிய பாப்ஸ்மியர்
பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
வாய்ப்புற்றுநோய்
‘நாட்டின் புற்றுநோய் பாதிப்பில், கிட்டத்தட்ட 30 சதவிகிதம் இதன்
பங்களிப்புதான். உயிரிழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது பெரிய புற்றுநோய் இது'
என்கிறது நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்ஃபேர்.
உதடு, ஈறுகள், நாக்கு, கன்னத்தின் உள்பக்க சுவர், மேல் வாய், கீழ் வாய்
என வாயின் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் செல் வளர்ச்சியடையலாம். வாயில்
ஆறாத புண், ரத்தக் கசிவு, கட்டி உருவாதல், பற்கள் விழுதல், நாக்கு வலி,
தாடை வலி அல்லது இறுக்கம், மென்று விழுங்குவதில் சிரமம், எச்சில்
விழுங்குவதில் சிரமம், தொண்டையில் தொடர்ந்து புண் ஏற்படுதல் போன்றவை இதன்
அறிகுறிகள். மருத்துவர் அல்லது பல் மருத்துவர் பரிசோதனையிலேயே கண்டறியலாம்.
இதை உறுதிசெய்ய, திசுப்பகுதி பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப் படும்.
தீவிரத்தைப் பொறுத்து, அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, ரேடியேஷன் போன்றவை
திட்டமிடப்படும். சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைத்
தவிர்ப்பதன் மூலம் இந்தப் புற்றுநோயைத் தடுக்கலாம்.
செரிமான மண்டலப் புற்றுநோய்
தென் இந்தியாவில் நமது உணவு முறை, பழக்கவழக்கம் காரணமாக இரைப்பை உணவுக்
குழாயில் வரக்கூடிய புற்றுநோய்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு, உணவு பதப்படுத்துதல், சுற்றுச்சூழல்
காரணமாக ஹெச்.பைலோரி வைரஸ் பாதிப்பு, இரைப்பையின் உள்ளே உருவாகும் பாலிப்
கட்டிகள், எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறுவது போன்ற காரணங்களால் இந்தப்
புற்றுநோய் ஏற்படுகிறது.
பெருங்குடலில் கலோனோஸ்கோப்பி பரிசோதனை செய்துபார்க்கும்போது, சிறுசிறு
கட்டிகள் இருந்தால், அவை எதிர்காலத்தில் புற்றுநோயாக மாறலாம். இதை
அறுவைசிகிச்சை இல்லாமலேயே அகற்றிவிடலாம். எண்டோஸ்கோப்பி செய்யும்போது
உணவுக் குழாயிலோ, இரைப்பையிலோ சிறு புண் இருந்தாலோ, மியூகோசல் அளவில்
ஆரம்பநிலையில் இருந்தாலோ, அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத் திவிட
முடியும். அப்படியே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும்கூட
லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றிவிடலாம். நவீன தொழில்நுட்ப வருகை காரணமாக
பெருங்குடல், உணவுப் பாதையில் வரக்கூடிய புற்றுநோய்களை இன்று முழுமையாகக்
குணப்படுத்த முடியும்.
சினைப்பைப் புற்றுநோய்
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகமோசமான புற்றுநோய்களில் ஒன்று சினைப்பைப்
புற்றுநோய். பெரும்பாலும், இந்தப் புற்றுநோய் கண்டறியும்போது அது மூன்று
அல்லது நான்காம் நிலையில் இருக்கிறது. முற்றிய நிலையில், வயிறு வீக்கம்,
சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த உணர்வு, உடல் எடை இழப்பு, இடுப்புப்
பகுதியில் அசௌகர்யம், செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அடிக்கடி சிறுநீர்
கழித்தல் போன்ற அறிகுறி கள் ஏற்படும்.
வயது அதிகரித்தல், மரபணு மாற்றங்கள், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் தெரப்பி, இளம்
வயதில் பூப்பெய்துதல் மற்றும் மிகத் தாமதமான மெனோபாஸ், குழந்தையின்மை,
குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்தல், புகைப்பழக்கம், பாலிசிஸ்டிக் ஓவரி
சிண்ட்ரோம் போன்றவை சினைப்பைப் புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
புற்றுநோய்- சில உண்மைகள்!
* இந்தியாவில் 25 லட்சம் புற்றுநோயாளிகள் உள்ளனர்.
* ஒவ்வோர் ஆண்டும் புதிதாக ஏழு லட்சம் பேருக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது.
* ஒவ்வோர் ஆண்டும் 5,56,400 பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
* எட்டு நிமிடங்களுக்கு ஒரு பெண், கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் உயிரிழக்கின்றார்.
* மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் இரண்டு பெண்களில், ஒருவர் மரணத்தைத் தழுவுகிறார்.
* புகையிலை தொடர்பான புற்றுநோய் காரணமாக தினமும் 2,500 பேர் மரணத்தைத் தழுவுகின்றனர்.
*
புற்றுநோய் காரணமான உயிரிழப்பில், ஆண்களில், ஐந்தில் ஒருவரும், பெண்களில்
20-ல் ஒருவரும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தியதன் காரணமாக
மரணிக்கின்றனர்.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேன்சர் பிரிவென்ஷன் அண்ட் ரிசர்ச் புள்ளிவிவரம்.
புற்றுநோயைத் தவிர்க்க...
* புகையிலைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புற்றுநோய் ஏற்படுவதைத்
தவிர்க்க முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் ஏற்படுவதற்கான
வாய்ப்பைப் பெருமளவு குறைக்க முடியும்.
* உடல்
எடையைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் நுரையீரல், செரிமானப் பாதை,
சிறுநீரகம், ப்ராஸ்டேட் உள்ளிட்ட பல புற்றுநோய்களுக்கான வாய்ப்பைக்
குறைக்கலாம்.
* சிலவகையான புற்றுநோய்களைத் தவிர்க்கத் தடுப்பூசிகள் உள்ளன. இதுபற்றி, உங்கள் குடும்ப மருத்துவரிடம் பேசித் தெரிந்து கொள்ளலாம்.
* எந்தப்
புற்றுநோயும் ஆரம்பநிலையிலேயே அறிகுறிகளை வெளிப்படுத்துவது இல்லை.
அறிகுறிகள் வெளிப்படும்போது அது முற்றியநிலையில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு
முறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கொள்வதன் மூலமும், சில ரத்தப்
பரிசோதனைகள் செய்துகொள்வதன் மூலமும் புற்றுநோயை ஆரம்பநிலையிலேயே
கண்டறியலாம்.
* புற்றுநோய் தவிர்ப்பு என்பது நம் கையில்தான் உள்ளது. அதை இன்றே தொடங்குவோம்; அதற்கான பலனை ஆயுள் முழுவதும் பெறுவோம்!
ஆண்களுக்கு அதிகளவு ஏற்படும் புற்றுநோய்கள்
1 வாய்ப் புற்றுநோய்
2 நுரையீரல் புற்றுநோய்
3 இரைப்பைப் புற்றுநோய்
4 பெருங்குடல் புற்றுநோய்
5 தொண்டைப் புற்றுநோய்
பெண்களுக்கு அதிகளவு ஏற்படும் புற்றுநோய்கள்
1 மார்பகப் புற்றுநோய்
2 கர்ப்பப்பைவாய் புற்றுநோய்
3 பெருங்குடல் புற்றுநோய்
4 சினைப்பைப் புற்றுநோய்
5 வாய்ப் புற்றுநோய்